கொரோனாவை ஒழிக்க குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்!: செப்டம்பரில் அனுமதி கிடைக்க வாய்ப்பு..எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..!!

டெல்லி: கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ள எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, செப்டம்பரில் அதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா 3ம் அலை உண்டானால் அது குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே டெல்லி மற்றும் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் தடுப்பூசியை இந்தியா கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார். 

மேலும் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியும் செப்டம்பரில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், பள்ளிகளை திறப்பதில் நாம் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். 

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உள்ள நிலையில், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது எனவும் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். அரசும், பொதுமக்களும் நினைத்தால் 3வது அலையை தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: