திருவனந்தபுரம்: முறத்தால் புலியை விரட்டிய பெண் குறித்து சங்க இலக்கியங்களில் படித்திருப்போம். கேரள மாநிலம், இடுக்கியில் ஒரு மூதாட்டி சிறுத்தையை தீப்பந்தத்தால் விரட்டியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு: இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள காந்தல்லூர் பாம்பன்பாறை பகுதியை சேர்ந்தவர் ேஜானி அவரது மனைவி ராஜம்மா (69). அவர்களின் வீடு வனப்பகுதி அருகே உள்ளது. ஜோனி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், ராஜம்மா தனியாக வசித்து வருகிறார். தனக்கு துணையாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜம்மா வளர்க்கும் நாய் பயங்கரமாக குரைத்தது. உடனே, ராஜம்மா வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை நாயை கடிக்க முயன்று கொண்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜம்மா வீட்டில் இருந்து தீ பந்தத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சிறுத்தையை தாக்கினார். இதனால், சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.