கேரளாவில் பரபரப்பு; காங். பெண் எம்பிக்கு கொலை மிரட்டல்: சிபிஎம் கட்சியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே காங்கிரஸ் பெண் எம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த,  சிபிஎம் கட்சியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர்  தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் ரம்மியா ஹரிதாஸ். நேற்று  ஆலத்தூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில்  துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்தும் ரம்மியா ஹரிதாஸ்  காரில் இருந்து இறங்கி பேசி கொண்டிருந்தார்.  இந்த சமயத்தில் அங்கு சிபிஎம் கட்சியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாசர், உறுப்பினர் நஜீப் ஆகியோர் வந்தனர்.

திடீரென 2 பேரும் எம்பியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தேவையில்லாமல் இங்கு வந்து நடிக்க வேண்டாம். இங்கு வந்தால் காலை வெட்டுவோம் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து எம்பி  ரம்மியா ஹரிதாஸ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2 பேரையும் கைது செய்ய ேகாரி சாலையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் ஆலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் எம்பி ரம்மியா ஹரிதாஸ் போலீசாரிடம் நாசர், நஜீப் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறினார்.  இது தொடர்பாக புகாரும் அளித்தார்.

இதையடுத்து போலீசார் நாசர், நஜீப் ஆகியோர் மீது வழக்குபதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஎம் கட்சியை சேர்ந்த 2 பேர் நடுரோட்டில் காங்கிரஸ் எம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: