தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் டிரிப் லைனை கத்தரிக்கோலால் நர்ஸ், நறுக்கிய போது பச்சிளம் பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானது. தஞ்சாவூர் அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(20). திருமணாகி ஒரு வருடமாகிறது. இந்நிலையில், 9 மாத கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினிக்கு கடந்த 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைமாத பிரசவம் என்பதால் குழந்தையின் வயிற்றில் கோளாறு இருப்பதாக கூறி தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் இடது கையில் டிரிப் லைன் மூலம் (வென்பிளான்) ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில், குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குழந்தையின் கையில் உள்ள டிரிப்லைனை நர்ஸ் ஒருவர், கத்தரிக்கோலால் நறுக்கும்போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது.