கொரோனா ஊரடங்கால் விற்பனையில்லை கொடைக்கானலில் வாடும் கொய்மலர்கள்-அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல் : கொரோனா ஊரடங்கால் பஸ் போக்குவரத்து இல்லாமல், கொடைக்கானலில் சாகுபடி செய்யப்படும் கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் உள்ள பூம்பாறை, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் ஜெர்பரா, அந்தூரியம், கார்னேசன் ஆகிய கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இம்மலர்களை பறித்து ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு தனியார் பஸ்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைப்பர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பஸ் போக்கு வரத்து இல்லை. திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இல்லாததால், செடியிலேயே கொய்மலர்கள் பறிக்கப்படாமல் உள்ளது. சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வங்கிகளில் கடன் பெற்று கொய்மலர் சாகுபடி செய்து வருகிறோம். ஊரடங்கால் வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால், மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. விவசாயிகள் ஒவ்வொருக்கும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: