புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட 2019-20ம் ஆண்டிற்கான பள்ளி கல்வி செயல்திறன் தர வரிசைப் பட்டியலில் கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு முதல் கிரேடுக்கு முன்னேறி உள்ளது. தேர்ச்சி, கல்வி அணுகல், உள்கட்டமைப்பு வசதிகள், கணக்கெடுப்பு தகவல்களைப் பயன்படுத்துதல், மூன்றாம் தர சரிபார்ப்பு உள்ளிட்ட 70 வகையான அளவீடுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி கல்வி செயல்திறனை மத்திய கல்வி அமைச்சகம் தர வரிசைப்படுத்துகிறது. 2019-20ம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்களும், சண்டிகர், அந்தமான் நிக்கோபர் தீவுகள் யூனியன் பிரதேசங்களும் முதல் இடத்தை பிடித்துள்ளன. இவை ஐந்தும் 901-950 புள்ளிகளுடன் கிரேடு ஏ++ தரத்தை பெற்றுள்ளன.