மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் உதவியாளர்களுக்கு கோயில்கள் மூலம் தினம் ஒரு லட்சம் உணவு பொட்டலம்: ஜூன் 14ம் தேதி வரை வழங்கப்படும்; அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கோயில்கள் மூலம் தினமும் ஒரு லட்சம் உணவுப்பொட்டலங்கள் வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள்  தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில், அவர்களது பசியினை போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.5.2021 அன்று முதல் 5.6.2021 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு ஏற்கனவே ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் 14.6.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுப்பொட்டலங்களை நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு தொடர்ந்து வழங்கிடவும், இதனால் தேவைப்படும் கூடுதல் நிதியினை இந்து அறநிலையத்துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து தேவைப்படும் கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: