ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.31 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 171,018,900 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 153,111,643 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 56 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 14,350,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,058 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.