இலங்கையின் கொழும்பில் ரசாயன சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து!: கப்பலில் சிக்கிய 25 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு..!!

கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகம் அருகே ரசாயனங்களுடன் வந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஊழியர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். சிங்கப்பூர் பதிவெண் கொண்ட எஸ்பிரஸ் பெர்ல் என்ற சரக்கு கப்பல், கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் ஹஸீரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கிளம்பியது. 1486 கண்டெய்னர்களில் மெட்ரிக் டன் நைட்ரிக் அமிலம் மற்றும் பல்வேறு ரசாயனங்களுடன் அந்த கப்பல் சென்றது. கடந்த 20ம் தேதி கொழும்பு சென்றடைந்த கப்பல், துறைமுகத்திற்குள் நுழைவதற்காக சற்று தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதன் அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென தீ பரவியது. 

இதற்கிடையே, கப்பலில் நைட்ரிக் அமிலம் இருந்த கண்டெய்னர் வெடித்து சிதறியதுடன், எட்டு கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளன. கப்பலில் பற்றிய தீயை, உலர்ந்த ரசாயன பொடி உதவியுடன் அணைக்கும் பணிகளில், கடற்படை கப்பல்கள் ஈடுபட்டு உள்ளன. பலத்த காற்று மற்றும் மழை இந்த பணிகளில் தொய்வு ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் மற்றும் விமான படையினர் இறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் மட்டும் இந்த விபத்தில் காயமடைந்தனர். கடலில் ரசாயனங்கள் கலந்ததால் மக்கள் கடற்கரை செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: