டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு தேவை அதிகரிப்பதால் தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இதன் தாக்கம் என்பதே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.