டெல்லி: கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டம் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை உக்கிரமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மருத்துவ பணியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் பெரும் பங்கு வகிப்பது மருத்துவ பணியாளர்களே. கொரோனா தொற்றால் மருத்துவ பணியாளர்கள் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 22 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கான 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.