விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி செல்லம்மாள் (30). இவர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரபு திருவெண்ணைநல்லூர் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார். கடந்த 8ம் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் பிரபுவை செல்போன் தொடர்பு கொண்ட திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளரும் விழுப்புரம் மாவட்ட தலைவருமான கலிவரதன், தேர்தல் எப்படி நடந்து முடிந்தது என்றார். மேலும் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடப்பதாக கூறினார். பிறகு பகல் 12 மணிக்கு மீண்டும் எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் பாஜகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கும் என கேட்டார்.