இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை: டி.சி.பி ஹரிஷ் பாண்டே தகவல்

பெங்களூரு: புட்டேனஹள்ளியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய 2 தனிப்படை  அமைக்கப்பட்டிருப்பதாக தென் மண்டல டி.சி.பி ஹரிஷ் பாண்டே தெரிவித்துள்ளார். பெங்களூரு புட்டேனஹள்ளி சரகத்திற்குட்பட்ட  ஜே.பிநகர் 7வது ஸ்டேஜில் மமதா (70)என்ற மூதாட்டி மற்றும் அவரது உறவினர் தேபரத் (45)  என்பவர் நேற்று முன்தினம் காலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். வீடு புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதால் முன்விரோதம்  காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்த நகை, பணம் மாயமாகியிருந்ததால், கொலையாளிகள்,  பழக்கமானவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தென் மண்டல டி.சி.பி ஹரிஷ் பாண்டேவும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக நேற்று நடந்த  பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தென் மண்டல டி.சி.பி ஹரிஷ் பாண்டே கூறும்போது; ``புட்டேனஹள்ளி இரட்டை கொலை வழக்கில் கிடைத்த  ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது பழக்கமுள்ளவர்களே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டில் இருந்த பணம், நகைகளும் திருடுபோயுள்ளது. இதனால் பணம், நகைக்கு ஆசைப்பட்டே கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது.

கொலையாளிகள்  குறித்த சில ஆதாரங்கள், சாட்சிகள் கிடைத்துள்ளது. அதை வைத்து அவர்களை தேடி வருகிறோம். இதற்காக புட்டேனஹள்ளி போலீசார்  தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதுடன் கிடைத்த சாட்சிகள், ஆதாரங்களை  வைத்து, கொலையாளிகளை கைது செய்வதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: