சென்னை: பாமக இப்போது பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது என காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசனை ஆதரித்து, காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகா, மருமகன் மனோஜ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழம்பி, திருப்பருத்திக்குன்றம், கூரம், திம்மசமுத்திரம், தாமல், பாலுசெட்டிசத்திரம், கோவிந்தவாடி அகரம், கோனேரிக்குப்பம் உள்பட பல பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவரை ஆதரித்து, முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டு குருவின் மகள் விருத்தாம்பிகா, அவரது கணவர் மனோஜ் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது: பாமக, பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் கூறுகிறார்கள். ஆனால் அரக்கோணம், நெமிலி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பேசும்போது, பெண் என்றும் பாராமல் பாமகவினர் என்னை தாக்க வருகின்றனர். அனைவரும் மது அருந்திவிட்டுதான் வந்தனர்.