வேளச்சேரியை முதன்மை தொகுதியாக்குவேன்: அசன் மவுலானா உறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து, நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடையாறில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அசன் மவுலானாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ராகுல்காந்திக்கு அசன் மவுலானா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அசன் மவுலானா பேசியதாவது, “வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு பொதுமக்கள் உற்சாக அளிப்பது எனக்கு நம்பிக்கை தந்துள்ளது. வேளச்சேரியில் அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க மக்களின் சேவகனாக என்றும் இருப்பேன். எனது வெற்றிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளார்.

இதேபோல், இப்போது ராகுல்காந்தியும் வேளச்சேரி தொகுதிக்கு வருகை தந்துள்ளார். ராகுல்காந்தியின் எளிமை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடையாறு பொதுக்கூட்ட பிரசாரமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டபோது, அனைவரும் உற்சாகமாக எனக்கு ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் நம்பிக்கையை தந்துள்ளது. நான் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவுடன் தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிச்சயம் பாடுபடுவேன். வேளச்சேரி தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன். தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் பிள்ளையாக நான் இருப்பேன்,” என்றார்.

Related Stories: