சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா நேற்று கலைஞர் நகர் வடக்கு பகுதி 127 ‘அ’ வட்டத்துக்கு உபட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, அவர் அங்கிருந்த சிறிய உணவகத்துக்கு சென்று, தோசை சுட்டு கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இது அங்கிருந்த மக்களையும், கட்சியினரையும் வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து மக்களை சந்தித்த அவர் வீடுகளின் படிக்கட்டில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டார். அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், இப்பகுதியில் கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டா பெற்று தரப்படும். கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி சேறும் சகதியும் குப்பையாக உள்ளதால், அதை தூய்மைப்படுத்த வழிவகை செய்து தரப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜ், வட்ட செயலாளர் மைக்கல், ஆடியோ சுரேஷ், சாமுண்டீஸ்வரி, சுரேஷ், விஜயலட்சுமி, நல்லேந்திரன், வாட்டர் விஜய், கோடீஸ்வரன், குல்பூஷன், சகாயம், சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.