காரியாபட்டி : காரியாபட்டியில் தரமான சாலை அமைக்க கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் 3வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் முறையாக சாலை அமைக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல்அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பழைய சிமெண்ட் சாலையை அப்புறப்படுத்தாமல் அதன்மீது தூசி மணல் அடித்து பேவர் பிளாக் ரோடு போட வேலையை ஆரம்பித்தனர். இதனை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் தரமாக சாலை ேபாட கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிமெண்ட் சாலை அங்குமிங்குமாக சிறிதளவு சேதம் ஏற்பட்டிருந்தாலும் நன்றாக உள்ளது ஆனால் இந்த ரோடை போடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் வேலை உத்தரவு வழங்கி உள்ளது. இந்த சாலையில் முறையாக வாறுகால் அமைக்க வேண்டும்.
இல்லையென்றால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கும். மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடும்.. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து நல்ல முறையில் அமைக்காமல் இரவோடு இரவாக தூசி மணலை தட்டிவிட்டு பேவர் பிளாக் பதிக்க ஏற்பாடு செய்கின்றனர். இந்த சாலையை நல்ல முறையில் போடாவிட்டால் இப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து பெரியளவில் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.