சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவி பெற்றவர் எடப்பாடி; சசிகலாவிடம் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை எடப்பாடி பழனிசாமி மறுக்க முடியுமா?.. மு.க.ஸ்டாலின் பேச்சு

வீரபாண்டி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண், ஏற்காடு வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதி. அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எடப்பாடி படிப்படியாக முதல்வர் பதவிக்கு வரவில்லை; தவழ்ந்து சென்று முதல்வர் பதவி வாங்கினார். எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை; சசிகலாவிடம் தவழ்ந்து சென்று முதல்வர் பதவி பெற்றவர். சசிகலாவிடம் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை எடப்பாடி பழனிசாமி மறுக்க முடியுமா?

4 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா மரணத்தை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வராதது ஏன்? ஜெ. மர்ம மரணம் என்று தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஏன் வரவில்லை? ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஓபிஎஸ் ஆஜராகவில்லை. தேர்தல் தோல்வி பயத்தில் ஆத்திரத்தில் ஜெயலலிதா மரணத்தில் எங்களை குற்றம் சாட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆறுமுகசாமி ஆணையத்தில் நான் ஆஜராக தயார், நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்; அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வில்லன் என்று கூட சொல்ல முடியாது; அது காமெடி வில்லன்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அனைவரும் கதாநாயகன் என்று புகழ்கின்றனர்; கதாநாயகியும் அதுதான். இலவச ஹெலிகாப்டர், இலவச விமானம் வழங்குவோம் என்று கூட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடும். திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து தேர்தல் அறிக்கையாக அதிமுக வெளியிட்டுள்ளது எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: