அரிச்சல்முனை கடல் பகுதிக்குள் நுழைந்த 2 இலங்கை வாலிபர்கள் படகுடன் கைது

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நேற்று காலை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து சுமார் 6 நாட்டிகல் மைல் தொலைவில் அமைந்துள்ள மணல் திட்டு பகுதியில் இலங்கை படகு ஒன்று அத்துமீறி நுழைந்து வருவதை பார்த்தனர். ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் தாழ்வாக பறந்து இலங்கை படகை துரத்தி சென்று அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க செய்தனர். பின்னர் படகில் இருந்த இலங்கை, தலைமன்னார் மாவட்டம், பேசாளையை சேர்ந்த அருண்குரூஸ்(31), ரேகன் பாய்வா(38) ஆகியோரை கைது செய்தனர். இதில், பேசாளை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க பைபர் கிளாஸ் படகில் வந்தபோது, திசை மாறி இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவித்தனர். மீனவர்களின் பைபர்கிளாஸ் படகை பறிமுதல் செய்ததுடன், கைது செய்யப்பட்ட 2 பேரையும் ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் மரைன் போலீசார், மத்திய, மாநில புலனாய்வு துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: