மக்கள் பதறி ஓட்டம் தாஜ்மகாலில் வெடிகுண்டு?

புதுடெல்லி: தாஜ்மகாலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் வரலாற்று காதல் சின்னமான தாஜ்மகால் அமைந்துள்ளது. தினமும் இதை ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். நேற்று காலையும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். காலை 9 மணியளவில் போலீசாரின் அவசரப் பிரிவுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன், ‘தாஜ்மகாலில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்,’ என்றான். தாஜ்மகாலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு இது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். மேலும், தாஜ்மகால் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: