கோவை: ‘‘அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளதன் பின்னணியில் பா.ஜ.வின் பங்கு உள்ளது’’ என சீதாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவையில் நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ. சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்றவும் மக்களின் நலனுக்காகவும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னணியில் பா.ஜ.வின் பங்கு இருக்கிறது. இந்த விலகல், பா.ஜ.விற்கு மகிழ்ச்சி அளிக்கும். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறது.