கர்நாடகாவில் வேலை கேட்டு வந்த இளம்பெண்ணுடன் உல்லாசம் கர்நாடக அமைச்சர் ராஜினாமா: முழு விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு: வேலை கேட்டு வந்த இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ, நேற்று முன்தினம்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்பெண் அவரிடம் வேலை கேட்டு வந்ததை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரை பதவி நீக்கம் செய்யும்படி காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனிடையே, ‘வீடியோவில் இருப்பது நானில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்,’ என்று ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார். ஆனால், கர்நாடக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை கிளப்ப திட்டமிட்டுள்ளன. இதை தவிர்ப்பதற்காக, ரமேஷ் ஜார்கிஹோளியை ராஜினாமா செய்யும்படி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார். இதனால், பாஜ மேலிடம் வீடியோ பற்றி தகவல்களை கேட்டது. நெருக்கடி அதிகரித்ததால் வேறு வழியின்றி ஜார்கிஹோளி நேற்று ராஜினாமா செய்தார். கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில், ``ரமேஷ் ஜார்கிஹோளிக்கு எதிரான புகார் பற்றி, முழுமையான விசாரணை நடத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: