பெங்களூரு: மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இ-நூலகத்தில் சுமார் 23.79 லட்சம் பேர் பதிவு செய்து பயனடைந்துள்ளனர் என பொதுநூலகதுறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பொதுமக்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பொது இலவச இ-நூலகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்களை தனிமையில் இருந்து காக்க இந்த இ நூலகம் பெரிதும் உதவியாக இருந்தது. இந்நிலையில் இதுவரை சுமார் 10.9 லட்சம் இ-புத்தகம் மற்றும் 5.49 லட்சம் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 23.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகபடியாக தென்கனரா மாவட்டத்தில் சுமார் 4.11 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.