சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ரூ.9.5 லட்சம் மோசடி செய்ததாக திரைப்பட இயக்குநர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் 83வது தெருவை சேர்ந்த கதிரவன் (24), கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன். அப்போது கடலூரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் செந்தில்குமார் நட்பு கிடைத்தது. புதிய படம் இயக்க தனக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்தில் உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என கூறினார். பின்னர், என்னிடம் இருந்து 3 தவணையாக ரூ.9.5 லட்சம் பெற்றார். ஆனால், எனக்கு சினிமாவில் நடிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை.