தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் உள்ஒதுக்கீடு அறிவித்து கபட வேடம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு உள்ஒதுக்கீட்டை அறிவித்து கபட வேடம் போடுகிறார் முதல்வர் பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சென்னை வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின்  குறை கேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி மாதவரம் வி.எஸ்.மணி நகர் விரிவு, வடபெரும்பாக்கம் சாலை அருகில் நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது: ஆட்சி முடியப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் பழனிசாமி தனது கபட வேஷங்களை நிறுத்தவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீட்டை பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் தேதி நாலரை மணிக்கு வரப்போகிறது என்று தெரிந்து இரண்டரை மணிக்கு இதை அறிவித்துள்ளார்.

இந்த நான்காண்டு காலம் அவருக்கு இதற்கான ஞானோதயம் ஏன் வரவில்லை. கடந்த டிசம்பர் 21ம் தேதி நீதிபதி குலசேகரன் தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. அந்த ஆணையத்தின் அறிக்கை வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு அறிவிப்பை அறிவிக்கிறார் என்றால் இங்குதான் பழனிசாமியின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சொல்லிவிட்டு, தற்காலிகமானது தான் என்றும் பழனிசாமி சொல்கிறார். இது இன்னொரு பெரிய மோசடி. திமுக அரசு அமைந்ததும் உடனடியாக நகர் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என்ற வாக்குறுதியை இக்கூட்டத்தின் வாயிலாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை திறந்து விடுவதில் அதிமுக அரசு காட்டிய அலட்சியத்தால் சென்னை மிதந்தது. ஊழல் மணியான வேலுமணி இந்த சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார். தான் கொள்ளை அடிப்பதற்கும், கணக்கு காட்டுவதற்குமான ஊராக சென்னையை ஆக்கிவிட்டார்.

சென்னை ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த தலைநகரத்தை நாம் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும். சென்னை மாநகரத்தின் மாவட்ட செயலாளர்களே, உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். சென்னையின் அனைத்துத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். ஒரு தொகுதி, ஒரே ஒரு தொகுதியைக் கூட விட்டுவிடக் கூடாது. 1959ம் ஆண்டு சென்னை மாநகராட்சியைக் கழகம் கைப்பற்றியது. கலைஞர் தான் தேர்தல் பொறுப்பாளர். அண்ணாவுக்கே நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் வெற்றி பெறுவோம் என்று சொன்னார் கலைஞர். அப்படி வெற்றி பெற்றால் கணையாழி அணிவிக்கிறேன் என்றார் அண்ணா. சொன்னது போலவே சென்னையை வென்றோம். கடற்கரைக் கூட்டத்தில் கலைஞருக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா. திமுக சார்பில் அ.பொ.அரசு மேயர் ஆனார்.  1967ம் ஆண்டு நாம் அரசு அமைக்க அடித்தளம் அமைத்தது சென்னையின் வெற்றி. அத்தகைய முழுமையான வெற்றியை சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சேர்ந்து ஈட்டித் தர வேண்டும். அத்தகைய வெற்றிக்குப் பிறகு அமையும் அரசு, இந்தச் சென்னையை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றும்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: