புதுடெல்லி: 2 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி விட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நாடாளுமன்ற எம்பியான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக ₹300 கோடி வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனது சொந்த வேலை நிமித்தமாக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.