மசினகுடி பகுதியில் பூத்து குலுங்கும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி :ஊட்டி அருகே மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளது.

பிளேம் ஆப் தி பாரஸ்ட் மரங்கள் இந்தியா,வங்கதேசம்,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காட்சியளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகேயுள்ள மசினகுடி,பொக்காபுரம்,தெப்பகாடு சாலையோரங்களில் இவ்வகை மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன.

இவற்றில் பூக்கும் மலர்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், மரங்கள் முழுக்க இலைகள் இன்றி பூத்துக் குலுங்கும். இதனை தொலைவில் இருந்து பார்க்கும் போது தீ பிளம்புகள் போல் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இந்த மலர்களை பிளேம் ஆப் தி பாரஸ்ட் என அழைக்கப்படுகிறது.

கடும் பனியால் வனத்தில் உள்ள புற்கள்,செடி,கொடிகள் கருகி வருகிறது. தற்போது வெயில் மற்றும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் வறட்சியை தாங்கி வளரும் இம்மரங்களில் பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் காண்பதற்கு அழகாக இருக்கும். அவை மரத்தில் இருந்து கிழே உதிர்ந்தால் மான்கள், காட்டுமாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் உணவாக பயன்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: