சென்னை: சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பெயர்களில் மத்திய அரசு டெண்டர்கள் பெற்று தருவதாகவும், பாஜ சார்பில் எம்.பி. சீட் வாங்கி தருவதாக ஒரு கும்பல் தொழிலதிபர்களை குறிவைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் பலர் தமிழக ஆளுநர் மாளிகையில் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளனர். அதன்படி தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து அளித்த புகாரின்படி, மோசடி நபர்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மோசடி நபர்களான மகாதேவ் ஐயா (59), அவரது மகன் அங்கீத் (29) மற்றும் ஓசூரை சேர்ந்த புரோக்கர் ஓம் (49) ஆகிய மூவரையும் அதிரடியாக கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.அந்த வகையில் மொத்தம் ரூ.300 கோடிக்கு மேல் 3 பேர் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.