அரசு நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு அமைச்சர் ஜெயக்குமார் ஷாக்

சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அரசு துறை அதிகாரிகள், சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி ஆகியோர் பங்கேற்று சிங்காரவேலர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவும் கலந்து கொண்டு சிங்காரவேலர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனால் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

வழக்கமாக இதுபோன்ற மறைந்த தலைவர்களின் பிறந்த நாளையொட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மட்டுமே கலந்து கொள்வார்கள். திடீரென குஷ்பு வந்து மரியாதை செலுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி விசாரித்தபோது, குஷ்பு பாஜ சார்பில் சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு சமீபகாலமாக காய் நகர்த்தி வருகிறார். இதனால் சென்னையில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளாராம். குஷ்புவின் இந்த திடீர் முடிவால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: