சென்னை: சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்ததைப் பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ், மறைமுகமாக தெருக்கூத்து என்று கிண்டலடித்துள்ளார். ஜெயலலிதாவின் தோழியும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் சித்தியுமான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அவர் நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, நேற்று அதிகாலை 6.45 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்களை திரட்டியிருந்தனர். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சசிகலா எதிர்பார்த்ததுபோல அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரடியாக சந்திக்கவில்லை.