நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் முறைகேடு விவகாரம் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில் அக்டோபர் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாக கூறி, கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாணவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவன் பலிகடா ஆகியுள்ளார். நீட் தேர்வின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம். தவறை ஒப்புக்கொள்வதற்கு மாறாக தேர்வு முகமையின் கவுரவத்தை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.

மாணவன் மீது தப்பு உள்ளதோ தேசிய தேர்வு மீது தப்பு உள்ளதோ எதுவாயினும், இது மாணவர்கள் மற்றும் அவர்களது மருத்துவ கனவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். அப்போது, இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, அதற்கான அவசியம் ஏதும் இல்லை என தெரிவித்த மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவர். தேசிய தேர்வு முகமை இந்த விவாகரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும். அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது.

மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது எனவும் வாதிட்டார். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும். இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை. ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் தாளின் திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதிவற்றை அழிக்கவோ முடியாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். இதனை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு மற்றும் மனுதாரர் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: