சென்னையில் இருந்து கடத்திச் சென்று மகாராஷ்டிராவில் கோவை கடற்படை வீரர் உயிருடன் எரித்துக்கொலை: ரூ.10 லட்சம் தராததால் கும்பல் வெறிச்செயல்

மும்பை: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர்  சுராஜ்குமார் துபே (27). இவர் கோவையில் உள்ள ஐஎன்எஸ் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மர்மக்கும்பல் ஒன்று துபேயை சென்னை விமான நிலையம் அருகே இருந்தபோது அவரை கடத்தி சென்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் வேவாஜி வனப்பகுதிக்கு கடத்தி சென்ற அந்த கும்பல் ராஞ்சியில் உள்ள துபேயின் குடும்பத்தினருடன் தொலைபேசியில்  பேசியுள்ளது. அப்போது கடற்படை வீரர் சுராஜ்குமார் துபேயை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் பிணயத் தொகையாக நாங்கள் சொல்லும் இடத்தில் அதை கொடுக்க வேண்டும் என்று  மிரட்டியுள்ளனர். அவ்வாறு பணத்தை தராவிட்டால் துபேயை கொன்று விடுவதாகவும் தொலைபேசியில் பேசிய நபர் துபே குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இதை துபேயின் உறவினர்கள் பொருட்படுத்தவில்லை. மேலும் ரூ.10 லட்சம் தரமுடியாது எனவும் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடற்படை அதிகாரி துபேயை வேவாஜி வனப்பகுதியில் தீ வைத்து உயிருடன் எரித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்நிலையில் இது பற்றி உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பால்கர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு நேற்று முன்தினம் பாதி எரிந்த நிலையில் கிடந்த துபேயின் சடலத்தை மீட்டு தஹானு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை ஐஎன்எஸ் அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பால்கர் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்மநபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: