ஆதரவாளர்களை தடுத்ததை கண்டித்து விமான நிலையத்தில் மோடி தம்பி தர்ணா

லக்னோ: விமான நிலையத்தில் தனது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பிரதமர் மோடியின் தம்பி அங்கேயே 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் பிறந்த சகோதரர்களில் அதிகம் அறியப்பட்டவர் பிரகலாத் மோடி. இவர் மோடியின் இளைய சதோதரர். இவர் நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை வரவேற்பதற்காக வந்த ஆதரவாளர்களை உள்ளே நுழைய போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட பிரகலாத் மோடி, விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து சவுத்ரி சரண்சிங் விமான நிலையத்தின் கூடுதல் பொது மேலாளர் பூபேந்திர சிங் கூறுகையில், ``பிரகலாத் மோடி நேற்று மாலை 4 மணிக்கு தனியார் விமானம் மூலம் லக்னோ வந்தார். அப்போது, அவருடைய ஆதரவாளர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால், பிரகலாத் மோடி அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டார்,’’ என்றார். பிரதமர் மோடியின் தம்பி இவ்வாறு தர்ணா போராட்டம் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: