அரசியலுக்கு நாங்க புதுசு... டிரெய்னிங் எடுக்கும் ரவுடிகள்

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் கட்சிகளில் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக இரு கட்சிகளிலும் அதிகளவில் இணைந்துள்ளனர். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக அதிமுகவும், மத்தியில் பாஜக இருப்பதால் இந்த இரு கட்சிகளில் இணைந்தால் தான் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி பல ரவுடிகள் அங்கு தாவினர். அவர்களுக்கும் கட்சி தலைமை பதவிகள் கொடுத்து அழகு பார்த்துள்ளது. இருப்பினும் அவர்களை ரவுடிகளாக பார்த்து பழகப்பட்ட பொதுமக்கள் இன்று கரைவேட்டியுடன் வருவதால் அலறுகின்றனர்.

இன்னும் பேச்சு, நடை உடை என அனைத்தும் மாறாமல் இருப்பதால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அவர்களை கூட அழைத்து செல்லவே அச்சம் அடைகின்றனர். அவர்களை கண்டால் எல்லாம் சற்று தள்ளி ஒதுங்கி நிற்கின்றனர். இப்படியே இருந்தால் நாமும் வளர முடியாது என்ற நிலைக்கு ரவுடிகளும் வந்துவிட்டனர். இதனால் தற்போது புதிய டெக்னிக் பணியில் இறங்கி உள்ளனர். அதாவது, மூத்த நிர்வாகிகளை சந்தித்து தாங்கள் எப்படி பொதுமக்களை அணுகி கட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவது, நாங்களும் உங்களுடன் வந்து கட்சி பணியாற்றுகிறோம் என்று அடம்பிடிக்கின்றனர்.

ஆனால் கட்சி நிர்வாகிகளோ இவர்களை எல்லாம் நாம் எப்படி பொதுமக்களிடம் அழைத்து செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இருப்பினும் சில மூத்த நிர்வாகிகள் அவர்களை ஆலோசனை கூட்டங்கள், பூத் கூட்டங்களில் அழைத்து சென்று பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும் பழைய கட்சிக்கார்களிடம் எப்படி பேசுவது? யார் யார் மூத்த நிர்வாகிகள், கட்சியில் உள்ள கட்டமைப்பு என்ன? தேர்தல் வந்தால் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் எப்படி வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபடுவது? போன்றவை குறித்து தனித்தனியாக தினமும் பயிற்சி வழங்கி வருகிறார்கள்.

Related Stories: