சசிகலாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில்  2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். 4 ஆண்டு தண்டனை முடிந்து நேற்று காலை சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையையொட்டி, அவருக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுப்ரமணிய ராஜா என்பவர் வரவேற்பு பேனர் வைத்திருந்தார். இதையடுத்து சுப்ரமணிய ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட செயல்பட்ட காரணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணிய ராஜா (திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: