கோவை: கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டல பொதுக்கூட்டம் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அவர் அளித்த பேட்டி: கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முஸ்லிம் ஜமாத்தாருடன் கலந்துரையாடினார். அப்போது சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை இதுவரை திரும்பபெறாத எடப்பாடி, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறுவதை யாரும் நம்பபோவது இல்லை. பா.ஜனதா கட்சியின் கொள்கையே இடஒதுக்கீட்டை ஒழித்து கட்டுவதுதான். அதற்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. அரசு வருகிற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். 1971 தேர்தலில் தி.மு.க. கூட்டணி 180-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அதைவிட அதிக இடங்களை தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறும் என்றார்.