தமிழக மக்களுக்காக முக்கிய அறிவிப்பை மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிடுகிறார்: சூடுபிடிக்கிறது சட்டப்பேரவை தேர்தல் களம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக முக்கிய அறிவிப்பை இன்று காலை வெளியிடுகிறார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுகவும் முழுவீச்சில் தயாராகி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மண்டல வாரியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ‘‘தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பில் 2021-சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் மூலமாக மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசினார். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை 16,500 ஊராட்சிகளில் நடத்த வேண்டும்  என்று முதலில் திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 22,000 கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 25 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு, அதிமுக ஆட்சியை நிராகரிக்கிறோம் என்று கையொப்பமிட்டு இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இதுதான் எனக்கு நிறைவான கிராம சபைக் கூட்டம்.

எனவே இது எனக்கு மறக்க முடியாத கிராம சபைக் கூட்டமாக அமைந்திருக்கிறது. கிராம சபைக் கூட்டத்தை ஏன் நிறைவு செய்கிறேன் என்றால், நான் அடுத்த பயணத்தை தொடங்கப் போகிறேன். என்ன பயணம் என்பதை 25ம் தேதி(இன்று) அறிவிக்க உள்ளேன். என்னுடைய பயணம் 234 தொகுதிகளுக்கும் இருக்க போகிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது அவர் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அவர் என்ன அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்ற பரபரப்பு கட்சியினரிடையே மட்டுமல்லாமல், மக்களிடமும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனைவரிடத்திலும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: