புதுடெல்லி: ‘‘ஏற்கனவே அறிவித்தப்படி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்,’ என்று விவசாய சங்கங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், மத்திய அரசுடன் இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அவை தோல்வியில் முடிந்தன. நாளை 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணியை நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.