சென்னை: தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: கேரளா மாநிலத்தின் எல்லையோரா மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், இரண்டு உதவியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட மொத்தம் 1,061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.