கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்

ராமேஸ்வரம் :  நாகபட்டினத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு நேற்று சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தென்கடல் பகுதிக்கு வந்த இந்த படகுகள் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை ஒவ்வொன்றாக கடந்து வடகடல் வழியாக சென்றன. அப்போது ஒரு சில படகுகள் பாலத்தில் கப்பல் செல்லும் போது திறக்கப்படும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தின் கீழ் பகுதியில் மோதியும், உரசிய படியும் சென்றன.

வழக்கமாக பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு, இதுபோன்ற மீன்பிடி படகுகள் கடந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று பாலம் திறக்கவில்லை. மேலும், கடல் மட்டமும் உயர்ந்து காணப்பட்டது. இதனால் படகுகள் சென்றபோது பாலத்தின் மீது மோதிச் செல்ல வேண்டிய நிலை உருவானது. பாலத்தை கடந்து சென்ற படகுகள் பாக் ஜலசந்தி கடல் வழியாக நாகப்பட்டினம் சென்றன. படகுகள் பாலத்தின் அடிப்பகுதியில் உரசியபடியும், மோதியும் சென்றதையடுத்து, பாலத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என கண்காணித்தனர்.

Related Stories: