திருமலை: திருப்பதியில் நடைபெற்று வரும் 10 நாள் சொர்க்க வாசல் தரிசனம் இன்றுடன் முடிகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என 2 நாட்கள் மட்டும்தான் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, 9வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 36,057 பக்தர்கள் இவ்வாறு தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 164 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில்,2.64 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்நிலையில், சொர்க்க வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்கும் நடைமுறை இன்றுடன் முடிகிறது.