கோவை: கோவை டவுன்ஹாலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த கோவை முதன்மை கல்வி அலுவலர் உஷா (51) மற்றும் அவரது நேர்முக உதவியாளர் பாலன் (53) ஆகியோரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எந்தெந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் எவ்வளவு ரூபாய் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கினார்கள்? என்ற விபரமும் சிக்கியது. அப்போது முதன்மை கல்வி அலுவலர் உஷா வழக்கு எதுவும் போடவேண்டாம் என கூறி கதறினார். இவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு சென்று குறைபாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டுவேன். அப்போது அவர்கள் பணம் தர முன் வருவார்கள். முறையாக இயங்கினாலும் ஒரு முறை ஆய்விற்கு சென்றால் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பேன்.’’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.