பிரிட்டனில் இருந்து வந்த நபருக்கு கொரோனா...!! வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறிப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உறுதி செய்தார். இந்த புதிய வைரஸ், தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டிற்கான விமான சேவையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இந்த ரத்து நாளை அமலுக்கு வருகிறது. பல நாடுகளும் விமான சேவையை ரத்து செய்துள்ளதால், இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் வரும் 31ம் தேதி வரை இந்தியா-இங்கிலாந்து விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன் வரை இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது;  பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்துள்ளது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன.டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக வந்த நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வீட்டு தனிமையில் இருந்த அவர் தற்போது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா உறுதியான நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: