ஆந்திர மக்களுக்கும், நம் நாட்டிற்கும் பல ஆண்டுகாலம் சேவையாற்றிடுக : முதல்வர் ஜெகன் மோகனுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : ஆந்திர முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டியின் 48வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி ஆந்திர முதல்வருக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவன்துலாவில், 1972 டிச., 21ல் பிறந்தவர், ஜெகன் மோகன் ரெட்டி. இவரது தந்தை, ஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.ஜெகன், வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். காங்., சார்பில் போட்டியிட்டு, எம்.பி.,யாக, பார்லிமென்டுக்கு சென்றார். முதல்வராக இருந்த போது, ராஜசேகர ரெட்டி, விமான விபத்தில் இறந்ததால், மாநில அரசியலுக்கு ஜெகன் மோகன் திரும்பினார்.2011ல், காங்கிரசில் இருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை துவக்கினார். 2019ல் நடந்த தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.ஜெகன் மோகன், ஆந்திர முதல்வராக பதவியேற்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் கூடிய நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்  இன்று (21.12.2020) மாண்புமிகு ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார்கள். அந்தக் கடிதத்தில், ‘மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள், நீண்ட ஆயுளுடன் ஆந்திர மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்லும் வகையில் உடல் ஆரோக்கியத்தை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் எனது அருமை நண்பருமான திரு. ஜெகன் மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆந்திர மாநில மக்களுக்கும், நம் நாட்டிற்கும் அவர் பல ஆண்டுகாலம் சேவையாற்றிட விழைகிறேன், இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: