ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இம்மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வரும் மே 7ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவின் மகனும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, மீண்டும் அதே தொகுதியில் களம் கண்டுள்ளார். அங்கு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உதவி கேட்டு வந்த பல பெண்களிடம் பிரஜ்வல் தவறாக நடந்து கொண்ட மற்றும் அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனால், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக மாநில மகளிர் ஆணையம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. வரும் 7ம் தேதி இரண்டாம் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பாஜ கூட்டணிக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.

* தந்தை மீதும் பாலியல் வழக்கு

ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கியுள்ள நிலையில், அவரது தந்தையும் கர்நாடக முன்னாள் அமைச்சரும் தேவகவுடாவின் மகனுமான எச்.டி.ரேவண்ணா மீது ஹாசன் மாவட்ட போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரது வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண் ஒருவர் தந்தை, மகன் இருவர் மீதும் பாலியல் புகார் அளித்துள்ளார். இப்பெண் ரேவண்ணாவின் மனைவி பவானியின் உறவினர். இவரை ரேவண்ணா மிரட்டி பலமுறை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதே போல் இவரது மகளுக்கு பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ கால் செய்து ஆபாசமாக அவரிடம் பேசியுள்ளார். இது குறித்து சமையல் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹொளேநரசிபுரா போலீசார் தந்தை, மகன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இப்பெண்ணுக்கு ரேவண்ணா குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

* சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பதிவில், ‘ஹாசன் தொகுதி எம்பியும், அந்தத் தொகுதியில் போட்டியிட்டுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விவகாரம் குறித்து கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இவ்விசயத்தில் எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, ரேவண்ணா விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தும்’ என்று தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் புகார்கள் குறித்து, மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா பதிலளிக்க வேண்டும்’ என்றார்.

The post ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: