டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற டிச.8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற டிசம்பர் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‛டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஹரியானா - டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சின்போது, விவசாயிகள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், அதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை. கடந்த காலங்களில், அமைக்கப்பட்ட குழுக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தீர்வை தரவில்லை என தெரிவித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற டிசம்பர் 8ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அகில இந்திய மோட்டார் காங். அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்தியா முழுவதும் 8-ம் தேதி லாரிகள் ஓடாது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவி்ட்டால் நாடு முழுவதும் லாரிகள் நிறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: