உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி காணொலி விசாரணையில் சட்டை அணியாத நபர்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் காணொலி விசாரணையின்போது, சட்டை அணியாத நபர் திரையில் தோன்றியதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக காணொலி காட்சி மூலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலமாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, காணொலியில் சட்டை அணியாத நபர் ஒருவர் திரையில் தோன்றினார்.

இதனால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். “கடந்த ஏழு, எட்டு மாதங்களாக வீடியோகான்பரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை சரிசெய்யப்படவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 26ம் தேதி நீதிபதி சந்திரசூட் அமர்விலான வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் மேல்சட்டையின்றி ஆஜரானார். அப்போது நீதிபதி, ‘‘யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பலர் முன்னிலையில் திரையில் தோன்றுகிறீர்கள். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: