திருமலை: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி 7 மாதங்களுக்கு பிறகு தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.108 வைணவ திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான சேவையாகும். அதேபோல், ஏழுமலையான் கோயிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கருட வாகனத்தில் மலையப்பர் நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால், கடந்த 7 மாதமாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீதியுலா ரத்து செய்யப்பட்டது.