சென்னை : ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்திக்குற்கு அப்பால் சாத்தான்குளத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாகக்கூறி வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஜூன் 19 ல் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இதையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர்.உடல்நலக் குறைவால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கஸ்டடி மரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் போலீசாரின் கஸ்டடியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், வடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து திருட்டு வழக்கில் தனது கணவரை தவறுதலாக கைது செய்து கொடூர கொலையை போலீசார் அரங்கேற்றி இருப்பதாக செல்வமுருகனின் மனைவி கடலூர் காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சாத்தான் குளம்- ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் காடாம்புலியூர் செல்வம். நீளும் காவல் மரணங்களின் பட்டியல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் காவல் மரணங்கள் நிகழ்வது போல தெரிகிறது. காவல் நிலையம் வரும் பொதுமக்களை முறையாக நடத்தாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார்.