திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள தீபமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில் தீபத்திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து, சென்னையில் தலைமை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருடன், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேரில் ஆலோசனை நடத்தினர். இதேபோன்று அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் கந்தசாமி தனித்தனியே ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக நடைபெறும் தீபத்திருவிழா வழிபாடுகள் எந்தவிதத்திலும் தடைபடாமல் நடத்தவும், திட்டமிட்டபடி கோயிலில் பரணி தீபம், மலை மீது மகா தீபம் ஏற்றவும் தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாட வீதியில் 10 நாட்கள் சுவாமி திருவீதியுலா நடத்துவதையும், தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று தேரோட்டத்தை நடத்துவதையும் தவிர்த்து, கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி வீதியுலா நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.